Sunday, July 26, 2009

இந்தியாவின் வல்லரசுக் கனவு...

இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே இருக்கிறது. அத்தனை பேருக்கும் உணவளிக்க வேண்டிய விவசாயத் துறை நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே போகிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி.

முன்பு, பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்த நம் முன்னோர்கள், இன்று பசுமைப் புரட்சி விவசாயத்தால் பெரிய அளவில் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாகிவிட்டது விவசாயம். அதனால், லாபமில்லாத தொழிலாக மாறிவிட்ட விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்த கிராமவாசிகள், விவசாயத்தை விட்டு நகரத்தை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில், நீர்ப்பாசன வசதி இருப்பதாகக் கருதப்படுகிற நிலம் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்ப் பாசன வசதியற்ற, வானம்பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேராகும்.

அதாவது, மொத்த நிலப்பரப்பான 130 ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர்தான் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 90 லட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் உணவு தானியங்களைப் பயிர் செய்தால் அதிக நஷ்டம் வருகிறது என்பதால் விவசாயிகளுக்கு உணவு தானியமற்ற பணப்பயிர் என்று சொல்லக்கூடிய விவசாய உற்பத்திப் பொருள்களின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது.

1970-ம் ஆண்டு வரையிலும்கூட சுமார் 25 சத நிலங்கள்தான் இப்படி உணவு தானியமற்ற மற்றவற்றை உற்பத்தி செய்யும் நிலங்களாக இருந்தன. இப்போது சுமார் 45 சதமாக இது மாறிய அதேவேளையில், உணவு தானிய உற்பத்தியில் இருந்த விவசாய நிலங்கள் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்து விட்டன.

காரணம், நாட்டின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குகிறோம் என்று கூறி வீரிய விதைகள், மலட்டு விதை போன்றவற்றைப் பயன்படுத்தி, குறைந்த நிலத்தில் நிறைந்த விவசாயம் செய்தல் போன்ற இயற்கைக்கு மாறான செயல்பாட்டால், இன்று விளைநிலங்கள் எல்லாம் பாழ்பட்டுள்ளன. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் விவசாய செலவு அதிகரித்ததே தவிர, விவசாயத்தால் லாபம் கிடைத்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

கிராமப்புறங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரம் இல்லாதது, பற்றாக்குறையான மின்சாரம், அனைத்து கிராமத்திலும் மும்முனை மின்சாரம் இல்லாதது போன்ற காரணங்களால் இன்று விவசாயம் சுருங்கி, பல கிராமங்களில் விவசாயம் இல்லாமல் விளை நிலங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. விவசாயத்திற்கு மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் விவசாயிகளை அரசின் கொத்தடிமைக் கடன்காரர்களாக மாற்றியதும் அரசின் இன்னொரு சாதனை.

விவசாய விளைபொருளுக்கு போதிய விலை நிர்ணயம் இல்லாததால், ரூ. 10 ஆயிரம் முதலீட்டில் அறுவடை செய்யப்படும் ஒரு விளைபொருள், சந்தையில் வெறும் ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டால் எப்படி விவசாயம் லாபகரமாக இருக்கும்? எந்த விவசாயிதான் தொடர்ந்து நஷ்டத்திற்கு ஒரு தொழில் செய்ய முடியும்? ஒவ்வொரு சாகுபடியின்போதும் இந்நிலை நீடிப்பதால், சூதாட்டத்தில் என்றாவது ஒரு நாள் ஜெயித்து லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் மாறி, மாறி கடன் கொடுத்து அவர்களை கடைசிவரை கடன்காரர்களாக அசிங்கப்படுத்துவதைவிட, விவசாய விளைபொருள்களுக்கு போதிய விலை நிர்ணயம் கிடைக்கச் செய்தாலே விவசாயிகள் லாபமடைவார்கள். நாட்டில் விவசாயத் தொழில் செழித்தோங்கும். விவசாயிகள் கூனிக்குறுகி மற்றவர்களிடம் கையேந்தி நிற்காமல் கெüரவமாக இருப்பார்கள்.

உரம் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ. 1.25 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கக்தக்கது என்றாலும், இதன் மூலம் விவசாயமோ, விவசாயிகளோ பயனடைவதைவிட ஒரு சில நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களுமே பயனடைவார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில், இந்த மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினால் அவர்கள் தனியாக இயற்கை உரம் மற்றும் செயற்கை உரங்களைப் பெற உதவியாக இருக்கும். விவசாயிகள் முழுமையாகப் பயனடைவார்கள். முதலாளி வர்க்கங்களை காப்பாற்றக் காட்டும் ஆர்வத்தில் 50 சதம்கூட விவசாய மற்றும் நடுத்தர மக்களைக் காப்பாற்ற அரசு முன் வருவதில்லை. மேலும் அவர்களை நசுக்கி வருகிறது என்றே கூறலாம்.

விவசாயத்தைப் பெருக்க ஆக்கப்பூர்வமான, நடைமுறைக்கு சாத்தியப்படும் நிலைகளை உருவாக்கி, கிராமப்புறங்களில் விவசாயம் செழிக்க வைக்க, விவசாய விளைபொருள்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்து ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா வல்லரசாகும் என்பது வெறும் கனவாகப் போய்விடும்.

கட்டுரையாளர் :என். கணபதி

நன்றி : தினமணி

No comments: