Saturday, June 20, 2009

பெல் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் ( பெல் ) மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க மத்திய அரசு முன் வந்திருக்கிறது. பெரிய தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் நேற்று இதனை தெரிவித்தார். இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இல்லாததால் இதற்கு எதிர்ப்பு அவ்வளவாக இருக்காது என்று எண்ணிய மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரூ.28,000 கோடி மதிப்புள்ள பெல் நிறுவனத்தில் 67.72 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மத்திய அரசு, கடந்த 2005 இலேயே அதன் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க முன் வந்தது. அப்போது இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்ததால், அது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வேறு வழியில்லாமல் மத்திய அரசு விற்பனையை கைவிட்டது. இப்போது இடதுசாரிகளின் தொந்தரவு இல்லாததால் மீண்டும் விற்பனைக்கான முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. பெல் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 67.72 சதவீத பங்குகளில் 10 சதவீதத்தை விற்கும் என்று தெரிகிறது. இப்போது பெல் நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ.1,02,334 கோடியாக இருக்கிறது. 10 சதவீத பங்குகளை விற்பதால் அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.10,234 கோடி கிடைக்கும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான சாதனங்களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. மத்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் லிஸ்ட்டில் பெல் நிறுவனமும் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இருந்தால், அந்த நிறுவனம் அதிக சுதந்திரம் கொண்டதாக இருக்கிறது என்று அர்த்தம்.
நன்றி : தினமலர்


No comments: