Saturday, August 9, 2008

ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும்: மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை


'பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உயர்த்தியது. இருந்தாலும், சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலையோடு ஒப்பிடுகையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 11.60 ரூபாய் குறைவாகவும், டீசல் 23.23 ரூபாய், கெரசின் 39.55 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 348.84 ரூபாய் குறைவாகவும் விற்கப்படுகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களுக்கு இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பு ஏற் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், பெட்ரோலிய பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்யவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட என்ன செய்வது என்பது குறித்த யோசனைகள் வழங்கவும், கேபினட் செயலர் சதுர்வேதி தலைமையில் கமிட்டி ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்த கமிட்டி தனது பரிந்துரைகளை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையை சிறிதளவு உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால், அடுத்த சில மாதங்களில், இந்த விலைகள் எல்லாம் சர்வதேச விலை நிலவரங்களுக்கு சமமாக வந்து விடும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவது குறைந்து விடும். உதாரணமாக, பெட்ரோல் விலை தற்போது சர்வதேச விலையை ஒப்பிடுகையில், 11.60 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிறிதளவு பெட்ரோல் விலையை உயர்த்தினால், அடுத்த 11 முதல் 12 மாதங்களில் சர்வதேச விலை நிலவரங்களுக்கு இணையாக உள்ளூர் விலையும் உயர்ந்து விடும். அதேபோல், டீசல் விலையை உயர்த்தினால், அடுத்த 22 முதல் 23 மாதங்களில் நஷ்டம் இல்லாத விலை உயர்ந்து விடும்.மேலும், 1999ம் ஆண்டுக்கு முன்னர் ஏலம் இல்லாமல் வழங்கப் பட்ட எண்ணெய் வயல்களுக்கு 'சூப்பர் லாப வரி' விதிக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை, சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறைவான விலைக்கு விற்பதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த, 'சூப்பர் லாப வரியால்' பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்காது. ரிலையன்ஸ், கெய்ர்ன், பி.ஜி., மற்றும் வீடியோகான் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.
கச்சா எண்ணெய் விலை குறைவு: லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 116 டாலர் என்று நேற்று குறைந்தது.கடந்த இருநாட்களாக இனி விலை ஏறும் என்ற நிலையை முற்றிலும் மாற்றியிருக்கிறது. துருக்கியில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் ராட்சத குழாயை, குர்திஷ் பிரிவினைவாத அமைப்பு துண்டித்ததால், இனி விலை உயரும் என்று கூறப்பட்டது.மேலைநாடுகளுக்கு சப்ளை செய்யும் வழி அடைபட்டதால், விலை அதிகரிக்கும் என்ற நிலை நேற்று மாறியது. அதிக அளவு விலையேற்றத்தால், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தேவையை சிறிது குறைத்துக் கொண்டதும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதும் இந்த விலை இறக்கத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
நன்றி : தினமலர்


No comments: