Monday, August 4, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகியது


ஆசிய சந்தையில் இன்று காலை நடந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகி விட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு குறைந்து வந்துகொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது சில நாட்களாக கூடி வருகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 125.10 டாலராக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின் போது 1.12 டாலர் உயர்ந்து 126.22 டாலராகி விட்டது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 82 சென்ட் உயர்ந்து 125 டாலராக இருந்தது. இந்த தடவையும் ஈரான்தான் விலை உயர்வுக்கு காரணமாக இருந்திருக்கிறது.வர வர ஈரானின் அணுசக்தி சோதனை பிரச்னை பெரிதாகிக்கொண்டே வருவதால் அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க கூடும் என்ற பேச்சு வந்துகொண்டிருப்பதால்,கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்கிறார்கள். உலகின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்தால் அங்கிருந்து வரும் எண்ணெய் சப்ளை பாதிக்கும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே ஈரான் பிரச்னையால்தான் ஜூலை 11ம் தேதி கச்சா எண்ணெய் விலை 147 டாலர் வரை உயர்ந்தது. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள் அதிக அளவில் இருக்கும் கல்ப் ஆஃப் மெக்ஸிகோ பகுதியில் புயல் உருவாகலாம் என்ற ஆபத்து இருப்பதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்கிரார்கள்.

நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

எல்லாம் அமெரிக்காவின் விளையாட்டா

இதிலும்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

கோவை விஜய் வருகைக்கு நன்றி

அவர்கள் தானே எப்போதும் பிரச்சனை இன் ஆரம்பம்