Monday, December 28, 2009

அசைவப் பிரியர்கள் வெறுக்கும் 'கருவாடு': கேரளா, புதுச்சேரியில் ஏறுமுகம்

சுகாதாரத்தைக் காரணம் காட்டி, 'தமிழக புகழ்' கருவாட்டை, அசைவ பிரியர்கள் புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது. ஆடு, கோழி, மீன், முட்டை என அசைவ உணவுகள் எத்தனை இருந்தாலும், கருவாடுகள் மீது அசைவ பிரியர்களுக்கு தாக்கம் அதிகம். வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, தாய்மார்கள் அன்புடன் கருவாடு அனுப்பும் பழக்கம், இன்றும் நடைமுறையில் உள்ளது. கிராமம் முதல் நகர் வரை தமிழகத்தில் கொடி கட்டி பறந்த கருவாடு விற்பனை, சமீபகாலமாக தொய்வடைந்து வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நிலவும் சுகாதாரக் கேட்டால், கருவாடுகளை வாங்க அசைவ பிரியர்கள் தயங்குகின்றனர். வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், கிடைத்த இடத்தில் மீன்களை கருவாடாக மாற்றும் முயற்சியில் மீனவர்கள இறங்குகின்றனர். மீனுடன் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், காய்ந்த பிறகும் அதனுடன் ஒட்டிக்கொள்ளும் என்பதால் தான் இந்த பீதி. தமிழக கடலோர பகுதிகளில் சுகாதாரம், சமீப காலமாக கேள்விக்குறியாக உள்ளது. மர்ம காய்ச்சல்கள் வேறு பரவி வருகின்றன. இதனால், கருவாடு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில், கேரளாவில் கருவாடு பதப்படுத்த நவீன வசதிகள் உள்ளன. புதுச்சேரியிலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இங்குள்ள கருவாட்டுக்கு, தமிழகத்தில் நல்ல கிராக்கி உள்ளது. அதே நேரத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலோரப் பகுதிகளில் வரும் கருவாட்டுக்கு, விற்பனை மந்தமாகவே உள்ளது. தமிழக மீனவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததும், இந்நிலைக்கு முக்கிய காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், நாளடைவில் இங்குள்ள மீன்களையும், அசைய பிரியர்கள் வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.
நன்றி : தினமலர்


No comments: