Tuesday, November 24, 2009

ஃபாஸ்ட்புட்டை பின்னுக்கு தள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழக இட்லி

தமிழர்களுக்கு இட்லி இப்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால் உலகஅளவில் இட்லிக்கு எந்த மவுசும் ஏற்படவில்லை. வெளி நாட்டுக்காரர்கள் இந்தியா வரும் போதும் இட்லியை சாப்பிட்டு விட்டு அதன் ருசியை பாராட்டுவது உண்டு. இருப்பினும் நாம் இன்னும் வெளிநாடுகளில் இட்லியை அறிமுகப்படுத்தாததால் அவை இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன.
சீனாவில் பிறந்த “நூடுல்ஸ்”, வெள்ளைக்காரர்களில் கண்டுபிடிப்பான “பர்க்கர்” போன்றவை இன்று உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து விட்டன. இப்போது இந்த இடத்துக்கு இட்லியையும் கொண்டு வரும் திட்டத்தை தஞ்சாவூரில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப மையம் உருவாக்கியுள்ளது. இட்லியை பதப்படுத்தி அனுப்புவதுதான் பெரிய பிரச்சினை அதை மட்டும் கண்டுபிடித்து விட்டால் இட்லியையும் உலக அளவில் சந்தைப்படுத்தி விடலாம். அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த மையம் முயற்சித்து வருகிறது. இது பற்றி இந்த மைய இயக்குனர் அழகு சுந்தரம் கூறியதாவது: இட்லியை உற்பத்தி செய்து, பதப்படுத்தி வெளிநாட்டு விற்பனைக்கு அனுப்ப 3 வருட ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பர்க்கர் போன்ற உணவுகளை விட இட்லியில் அதிக சத்தும், ருசியும் இருக்கிறது. இருந்தாலும் ஏன் இதை உலக அளவில் பிரபலப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது. இட்லி மிகவும் சத்தான உணவு. விலை மலிவான உணவு. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம்.
எனவே இதை தொழில் உற்பத்தி பொருளாக்கி சந்தை படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதன் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கி உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக குடும்ப பெண்கள் பங்கேற்கும் “இட்லி மேளா” என்ற விழாவை டிசம்பர் 3ந் தேதி தஞ்சாவூரில் நடத்த உள்ளோம். அப்போது குடும்ப பெண்கள் ஒவ்வொரு வரும் இட்லியை தயாரித்து கொடுக்கலாம். அதில் எந்த இட்லி ருசியாக இருக்கிறது. எப்படி தயாரிப்பதால் இந்த ருசி வருகிறது? என்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


2 comments:

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

பாரதி said...

Thirumathi JayaSeelan வருகைக்கு நன்றி