Saturday, August 29, 2009

வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்

கடந்த ஜூன் ஆறாம் நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடி முடித்துவிட்டார்கள். வழக்கம்போல பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம். நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார்.

வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.

இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன.

அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன.

இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும்.

மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.

இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம்.

அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.

அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன.

மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

கட்டுரையாளர் : கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

2 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அப்பல்லாம் வீட்டுக்கு வெள்ள தான அடிச்சுகிட்டு இருந்தோம்.அந்த பழக்கத்த கொன்னுபுட்டு இப்ப வெள்ளகாரன் சொல்லி திரும்ப ஆரம்பிக்கணுமாக்கும்.நல்ல இருக்கு நாம வாழுற லெட்சணம்.