Monday, August 31, 2009

ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை கிடுகிடு: டிபன் விலை சர்...

தமிழகத்தில் உணவுப் பண்டங்கள் தயாரிப்பின் மூலப்பொருளான அரிசி, எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை ஓராண்டில் ஒன்பது முறை அதிகரித்து விட்டது. இதனால், ஓட்டல்களில் சாப்பாட்டின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, 2008 ஜூன் 3 முதல், ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஓட்டல்களில், அரசின் பார்வையில் இருந்து தப்பிக்க, 20 ரூபாய்க்கு சாப்பாடு என்பது பெயரளவில் வழங்கப் பட்டு வருகிறது. அதையும், சில ஓட்டல்கள் சத்தமின்றி கைவிட்டு விட்டன. தற்போது, தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இவற்றின் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கும் அரசு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தங்களின் ஓட்டல் மீதான நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், மதிய சாப்பாடு விலையை சத்தமின்றி ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட, தமிழகத்தின் பிற மாவட்டங்களில், 27 ரூபாய்க்கு விற்கப்பட்ட அளவு சாப்பாடு தற்போது, 28 ரூபாயாகவும், 33 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு 37 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அளவு சாப்பாடு 33 ரூபாயாகவும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு 45 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தை, கடந்த 28ம் தேதி முதல் ஓட்டல் உரிமையாளர்கள் அரங்கேற்றி உள்ளனர். சாப்பாடு விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, டிபன் வகைகளின் விலை, அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உணவுப் பண்டங் கள் தயாரிப்பின் மூலப்பொருளான அரிசி, எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை ஓராண்டில் ஒன்பது முறை அதிகரித்து விட்டது. ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் ஆகியவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து வைத்திருந்தோம். ஆனால், தற்போது அவற்றின் இருப்பு தீர்ந்து விட்டதால், புதிதாகக் கொள்முதலைத் துவக்கி உள்ளோம். இதில், அத்தியாவசிய சமையல் பொருட்களான கடுகு முதல் பருப்பு வரை அனைத்து பொருட்களும், 20 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்வை சந்தித்துள்ளன. சமையல் காஸ் விலை, மூன்று மாதத்தில் 170 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தில் இருந்து எங்கள் தொழிலை காத்துக் கொள்ளும் வகையில், உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்தியுள்ளோம். ஓட்டல்களில் சாப்பாடு விலையில் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் டிபன் வகையின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். செப்டம்பர் 1 முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளதால், ஓட்டல்களில் காபி, டீ விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: