Tuesday, August 25, 2009

எடை குறைத்தும் விலை குறைக்காத பன்னாட்டு நிறுவனங்கள்: நுகர்பொருட்களில் நடக்கும் நூதன மோசடி

இலவசம், விலை குறைப்பு என்ற போர்வையில், பொருட்களின் எடையைக் குறைத்து, நுகர்வோரை பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. இரண்டு வாங்கினால் மூன்று இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என, இலவசங்களைக் கண்டு பழகிப்போன மக்கள், இலவசம் என்றாலே அந்த பொருளை வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இந்த பேராசை தான், தற்போது, பெரும் நஷ்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இலவசங்களை கொடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு தயாரிப்புப் பொருட்களை அண்ட விடாமல் செய்து வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையைக் குறைத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் சில நேரங்களில், விலையைக் குறைக்கின்றன; பல நேரங்களில் பொருளின் எடையை குறைக்கின்றன. பொருளை மட்டும் பார்க்கும் பொதுமக்கள் கண்ணுக்கு, எடை குறைப்பு தெரிவதில்லை.
தற்போது, நுகர்வோர் சந்தையில், அதிகளவில் வெளிவரும் குளியல் சோப்பு, வாஷிங் பவுடர், சலவை சோப்பு மற்றும் சில உணவுப் பொருட்களில், பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்கள் அளவு இருப்பதில்லை. பொருளின் எடையைக் குறைக்கும் நிறுவனங்கள், விலையில் எந்த குறைப்பும் செய்வதில்லை; மாறாக, சமயம் பார்த்து உயர்த்தவே செய்கின்றன. விளம்பரம் என்ற வியாபார யுக்தி, மக்களின் கண்ணை முழுவதுமாக மறைத்துவிடுகிறது. குளியல் சோப்புகளான ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், லைபாய் மற்றும் சலவை சோப்பான ரின் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம் விலையை நிலை நிறுத்தி, எடையைக் குறைத்துள் ளது. 400 கிராம் விம் பார் 365 கிராம் தான் உள்ளது. இதன் விலை பல காலமாக 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, 200 கிராம் என்பது 192 கிராம் தான் உள்ளது. இவ்வாறாக நுகர்வோர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் 8 முதல் 150 கிராம் வரையில் எடை குறைப்பு உள்ளது.
எடை குறைவு குறித்து, இந்நிறுவனங்கள் பாக்கெட்களின் மீது அறிவிப்பு எதையும் தருவதில்லை. ஒரு கிலோ டைடு சலவை பவுடர் பாக்கெட்டை எடை போட்டு பார்க்கும்போது 900 கிராம் மட்டுமே உள்ளது; 100 கிராம் குறைவாக உள்ளது. நுகர்வோர் எடை போட்டு பார்த்தால், தங்கள் பெயர் தான் கெடுகிறது என, வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சோப்பு, சலவைத்தூள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருட்கள் விலை குறைந்துள்ள சூழலில், இந்திய தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் சலவை சோப்பு, பவுடர்கள் விலையில் கடும் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதே மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்கள், ஒப்புக்கு கூட விலையை குறைக்கவில்லை. மாறாக, எடை குறைப்பை செய்துள்ளன.
இதுகுறித்து, தமிழக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை குறைவு, மூலப்பொருட்கள் விலை குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். சுதேசி தயாரிப்புகள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் குறையவில்லை. மாறாக, எடையை கணிசமாக குறைத்துள்ளன. விலையைக் குறைக்காமல், தங்கள் நிறுவனத்தின் துணை தயாரிப்புகளை இலவசமாக கொடுக்கும் தந்திரத்தைக் கையாள் கின்றன. உதாரணமாக, ஹமாம் சோப் வாங்கினால், தற்போது, இரண்டு ரூபாய் மதிப்புள்ள புரூ காபி தூள் பாக்கெட் இலவசம். நுகர்வோர் இலவசத்தை கண்டு ஏமாறுகின்றனர். இவ்வாறு சொரூபன் கூறினார்.
நன்றி : தினமலர்


2 comments:

வனம் said...

வணக்கம்

ஆம் நீங்கள் சொல்வது உண்மை.

பற்பசை குமிலின் வாயை பெரிதாக வைப்பது ஒரு மேலைன்மை (management tec) சித்தாந்தமாக வரையறுக்கப்பட்டுள்ளது இதன் உள்ளர்த்தம் பார்த்தால் நுகர்வோருக்கே தெரியாமல் அவர்களை அதிகமாக உபயோகப்படுத்த வைப்பதுதான்

இராஜராஜன்

பாரதி said...

வனம் வருகைக்கு நன்றி