Friday, July 17, 2009

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

கடந்த மே மாதத்திற்கு பிறகு இப்போதுதான் இந்திய பங்கு சந்தை மிகப்பெரிய வாராந்திர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாக்கல் செய்த பட்ஜெட்டால் ஏற்பட்ட அதிருப்தியால் பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. அந்த சரிவு இந்த வாரத்தில் சரி செய்யப்பட்டு விட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்கின் அளவை அது குறைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டை செய்து வருவதையடுத்தும் பங்கு சந்தை வளர்கிறது என்கிறார்கள். என்எம்டிசி யில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை அது விற்று, ரூ.10,000 கோடியை திரட்ட முடிவு செய்திருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. என்எம்டிசி, எம்எம்டிசி, ஹிந்துஸ்தான் காப்பர், இஞ்சினியர்ஸ் இந்தியா மற்றும் என்டிபிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சகம் நேற்று அறிவித்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தைகளின் வளர்ச்சியும் இந்திய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வாரத்தில் எஸ் அண்டி பி 500 இன்டக்ஸ் 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆசிய பங்கு சந்தைகளும் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கின்றன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 494.67 புள்ளிகள் ( 3.47 சதவீதம் ) உயர்ந்து 14,744.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 143.55 புள்ளிகள் ( 3.39 சதவீதம் ) உயர்ந்து 4,374.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நேற்று வியாழன் அன்று ரூ.95,168.90 கோடிக்கு நடந்திருந்த வர்த்தகம், இன்று ரூ.98,973.84 கோடியாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: