Thursday, April 16, 2009

8,700 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கி

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யு பி எஸ், அதன் ஊழியர்களில் 8,700 பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அடுத்த வருடத்தில் இந்த ஆட்குறைப்பு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. 2009 ம் வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும், அந்த வங்கி 2 பில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் ( சுமார் 8,750 கோடி ரூபாய் ) நஷ்டமடைந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் லோன் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது யு பி எஸ் வங்கிதான் என்கிறார்கள். ஆட்குறைப்பு குறித்து அதன் பங்குதாரர்களிடையே பேசிய யு பி எஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆஸ்வால்ட் குருபெல், என்னால் இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றார். இது குறித்து பி பி சி செய்தி நிறுவனத்திடம் பேசிய யு பி எஸ் வங்கியின் தலைவர், இதற்கு முன் இந்த வங்கியில் இருந்த நிர்வாகம் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இப்போதுள்ள நிர்வாகம், ஒரளவு வங்கியை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற வங்கி துறையை, மீண்டும் சிறப்புடையதாக ஆக்க புது நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். யு எஸ் பி வங்கியின் சேர்மன் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் சமீபத்தில்தான் மாற்றப்பட்டறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; தினமலர்