Friday, March 13, 2009

கலால் வரி செலுத்துவோருக்கு ஏ.சி.இ.எஸ்., திட்டம் அறிமுகம்

கலால் மற்றும் சேவை வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யும் ஏ.சி.இ.எஸ்., திட்டம் சென்னையில் நேற்று துவக்கப்பட்டது. மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை, வரி செலுத்துவோர் மின்னணு முறையில் கணக்குகளை பதிவு செய்யவும், அறிவிப்பு மற்றும் ஆவணங்களை பெறவும், பதிவின் அன்றைய நிலையை அறியவும் ஏ.சி.இ.எஸ்., (ஆட்டோமேஷன் ஆப் சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ்) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் சோதனை முயற்சியாக பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் சேவை வரி மையம் மற்றும் அதிகளவில் வரி செலுத்துவோர் மையம் ஆகிய இரு மையங்களில் இத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர், 'சிஸ்டம்ஸ்' பிரிவு பொது இயக்குனர் பரண்டே, சென்னை மண்டல மத்திய கலால் துறை முதன்மை கமிஷனர் விட்டல் தாஸ் ஆகியோர் கூறியதாவது: வரி செலுத்துவோர், அலுவலகத்திற்கு நேரில் வராமல் மின்னணு முறையில் தனது கணக்குகளை பதிவு செய்ய முடியும். வரி செலுத்தியதில் மீதத்தொகையை திரும்பப் பெறும் கோரிக்கையையும் மின்னணு முறையில் பதிவு செய்யலாம். மேலும் தங்களது பதிவின் நிலையையும் உடனுக்குடன் கம்ப்யூட்டர் மூலம் அறியலாம். இத்திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பெங்களூரில் தற்போது 100 சதவீதம் பேர் இம்முறையிலேயே தங்களது கணக்கை பதிவு செய்கின்றனர். தற்போது சென்னையில் இரு மையங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாளை கோவையிலும், இம்மாத இறுதிக்குள் பெலாபூர், புவனேஷ்வரிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கொள்கைகளை உருவாக்குவதற்கான எம்.ஐ.எஸ்., அறிக்கைகளையும் உருவாக்க முடியும். நாடு முழுவதும் உள்ள 580 மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கும் 'வைட் ஏரியா நெட்வொர்க்' திட்டம் 580 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டில்லியில் தகவல் மையமும், சென்னையில் பேரிடர் சமயங்களில் தகவல் மீட்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: