Wednesday, February 11, 2009

20 ஆயிரம் ரோஜா இப்போதே ரெடி: காதலர் தினத்திற்காக காத்திருப்பு

காதலர் தினத்தை ஒட்டி, பல வகையான ரோஜாக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் மட்டும், 20 ஆயிரம் ரோஜாக்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், பிப்., 14ம் தேதி, காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட்டிற்கு, பெங்களூரு, ஓசூர், ஊட்டியிலிருந்து விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, இளம்சிவப்பு நிறங்களில் ரோஜாக்கள் உள்ளன. இது தவிர, ஓப்பன் டச், பார்ம், எக்ஸ்போர்ட் என்று மூன்று ரகங்களில் ரோஜாக்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், கடினமான, மெல்லிய, மிக மெல்லிய, இதழ்களை கொண்டிருக்கும். இதழ்களின் மிருது தன்மையை பொறுத்து, விலை நிர்ணயிக்கப்படும். ரோஜா வியாபாரி உமர் கூறியதாவது: ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் ரோஜாக்கள், உள்ளூர் தேவைகளுக்கே சரியாக உள்ளது. கோவை மார்க்கெட்டிற்கு எப்போதாவது ஊட்டி மற்றும் குன்னூரிலிருந்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிக்கு, பெங்களூரிலிருந்து தான் ரோஜாக்கள் அனுப்பப் படுகின்றன. 20 எண்ணிக்கை கொண்ட கட்டு, துவக்க விலையாக, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு உமர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: