Wednesday, December 31, 2008

ஜி.எஸ்.எம்., சேவை துவக்கியது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை நேற்று நாடு முழுவதும் துவக்கியது. இதன் மூலம், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., என, இரண்டு சேவைகளையும் வழங்கும் முதல் தொலை தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 11 ஆயிரம் நகரங்களில் தற்போது ஜி.எஸ்.எம்., சேவையை துவக்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் 22 ஆயிரம் நகரங்களுக்கு சேவை விரிவுபடுத்தப்படும். இந்த ஜி.எஸ்.எம்., நெட்வொர்க்கை வழங்குவதற்காக, கடந்த 15 மாதங்களாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப் பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் சி.டி.எம்.ஏ., சேவையை ஏற்கனவே நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை இதுவரை கிழக்கு மாநிலங்களின் எட்டு வட்டங்களில் மட்டுமே வழங்கி வந்தோம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 3 ஜி ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இந்த உயர் தரமான மொபைல் சேவை வழங்குவதற்காக 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளிலும், ஜி.எஸ்.எம்., சேவையை துவக்க உரிமம் பெற்றுள்ளது. இவ்வாறு அனில் அம்பானி கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: