Tuesday, December 16, 2008

வீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்களை கவர சலுகை! வங்கிகள் அதிரடி

வீட்டுக் கடன்களுக்கான வட்டியை கணிசமாகக் குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அத்துடன், சில வங்கி நடைமுறை கட்டணச் சலுகைகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இது, நடுத்தர மக்கள் வீடு வாங்க ஆர்வத்தைத் தூண்டும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் திடீரென பூதாகர வளர்ச்சி பெற்றது. நிலம் வாங்குவதும், வீடு வாங்குவதும் குதிரைக் கொம்பாக ஆனது. வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வங்கிகளில் அதிகம் இருந்ததால், வீடு வாங்குவது என்பது முடியாத செயல் என்று பலரும் நினைக்கத் துவங்கினர்.தற்போது, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை புத்துயிர் பெறச் செய்ய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வங்கிகள் வட்டியைக் குறைத்தது : அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் வீட்டுக்கடன் கிடைக்கச் செய்ய மத்திய அரசு, வங்கிகளை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக வீட்டுக் கடன் வட்டியில் நிரந்தர வட்டி, புளோட்டிங் என்று கடன் வாங்கியவர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கினர். இதனால், வங்கிகளில் கடன் வாங்குவது குறையத் துவங்கியது. சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு 11 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை காரணமாகவும், கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும்பாலான வங்கிகள் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியைக் குறைத்தது. தற்போது, பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை மேலும் குறைத்து, ஏழை நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் வழி செய்ய வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், சில பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.குறிப்பாக, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி குறைப்பு சலுகைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.சலுகை: இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின்(ஐ.பி.ஏ.,) கூட்டம், நேற்று மும்பையில் நடந்தது. இதன் தலைவரான டி.எஸ்.நாராயணசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் ஸ்டேட் பாங்க் தலைவர் ஓ.பி.பட், நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி 9.25 சதவீதமாக இருக்கும். இந்த இரண்டு வட்டி வீதங்களும் ஐந்து ஆண்டு காலத்திற்கானது. கண்டிப்பாக இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது.இது, அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரூ.20 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இனிமேல் பிராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது இல்லை.வீட்டுக் கடனுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.வீட்டுக் கடன் வழங்குவதில் மாற்றம் செய்யவும், சலுகைகள் வழங்கும்படியும் மத்திய அரசு கடந்த 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை இந்திய வங்கிகள் சங்கம் எடுத்துள்ளது.மேலும், வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம் கடன் பெறுபவர்களுக்கு வங்கிக்கு முன்பணமாக 10 சதவீதமும், ஐந்து லட்சத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள் முன்பணமாக 15 சதவீதமும் செலுத்த வேண்டும்.வீட்டுக் கடன் குறைப்பு, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் புதிய கடன் ஆகியவற்றுக்கான வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி கட்ட, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு பட் கூறினார்.
மகிழ்ச்சியா ? ஏமாற்றமா ? : வங்கிகளின் இந்த முடிவை, வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமாக உள்ள டி.எல்.எப்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் தல்வார் கூறுகையில், "வட்டி வீதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. இது, 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால் சூப்பர் மெட்ரோ, மெட்ரோ, முதல் தர நகரங்களில் வசிப்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை' என்றார்.பாரஸ்வநாத் டெவலப்பர்ஸ் சேர்மன் பிரதீப் கூறுகையில், "நாங்கள் வட்டி குறைப்பு மேலும் அதிகமிருக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. முன்பணத்தின் அளவைக் குறைத்திருப்பதும், பிராசசிங் கட்டணம் ரத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: