Sunday, November 23, 2008

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி இந்தியாவிலும் எதிரொலி -சேதுராமன் சாத்தப்பன்

அமெரிக்காவில் வியாழனன்று பங்குச் சந்தையில் ஏற் பட்ட சரிவு உலகளவில் எதிரொலித்தது. அடுத்தாண்டு அமெரிக்காவில் பொருளாதாரம் ஏற்றம் காண வாய்ப் பில்லை என்ற அறிக்கையும், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸலர் ஆகியவை மூழ்கும் நிலைமையில் உள்ளன (அரசாங்கம் ஏதும் நடவடிக்கைகள் எடுத்து காப் பாற்றவில்லை என்றால்) என்பதும், வேலையில்லாதவர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பவர்கள் கடந்த 16 வருடங்களில் தற்போது தான் மிகவும் அதிகம் என்ற செய்திகளும் வந்து அங்கு பங்குச் சந்தையை தாக்கின.
அந்த சுனாமி, உலகின் பல இடங்களிலும் அடித்தது. இந் திய பங்குச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. மும்பை பங்குச் சந்தை 322 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 6.8 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 8.90 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வாரத்தை விட சிறிது குறைவு. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையும், அடுத்த வாரம் டிரைவேடிவ் கான்டிராக்ட்களின் முடிவுத் தேதி வருவதால் பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றமும் வெள்ளியன்று தெரிந்தது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 464 புள்ளிகள் கூடியது. சமீப காலத்தில் இறக்கத்தையே சந்தித்து வந்த முதலீட்டாளர்களுக்கு வெள்ளி விடிவெள்ளியாகவே இருந்தது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,693 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
பணவீக்கம் இன்னும் குறையுமா?: கட்டாயம் குறைய வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசாங்கம் இன்னும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்கவில்லை. இது குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும்.
ஒவ்வொரு தினமும் எண்ணெய் கவனி என்ற வாசகம் போய்விட்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் அவ்வளவு குறைந்து விட்டது. வாங்க ஆள் இல்லை. இனி டாலரை கவனி என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.டாலரின் மதிப்பு 50 ரூபாயையும் தாண்டி சென்றுள்ளது. ஏன் இப்படி பந்தயக் குதிரை போல ஓடுகிறது? வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று பணம் எடுத்துச் செல்கின்றன. அதனால், டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் கூடிவரும் டாலரைப் பார்த்து பயந்து பார்வேட் கான்டிராக்ட் போட ஓடுகிறனர். அது டாலரின் மதிப்பைக் கூட்டுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்கின்றனர், இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில். இதனால், நாளுக்கு நாள் டாலர் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.தங்கமே, தங்கமே: என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடுவாரே, அது போல தங்கத்தைப் பார்த்து பாடத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் ஏறி வருகிறது. ஏன்? பங்குச் சந்தை சரிந்து கொண்டு வருகிறது, அதே சமயம் டாலர் மதிப்பும் கூடிவருகிறது. இருக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்ய வேண்டும். இடம் வேண்டுமே? அதற்கு தான் தங்கத்தில் முதலீடு செய்ய எல்லாம் ஓடுகின்றனர். சமீப வருடங்களில் தங்கம் நல்ல முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை; எல்லா நாடுகளிலும் சந்தை நிலமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளையும் பொறுத்து சந்தையின் போக்கு அமையும்.
நன்றி : தினமலர்


No comments: