Tuesday, January 5, 2010

ஒரு வேலைநிறுத்தம், இரு பரிமாணங்கள்

பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.

இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.

இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.

வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.

திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.

1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.

ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.

இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.

ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:

""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.

""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''

இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:

""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.

இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.

அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

2 comments:

கண்ணகி said...

இத்ற்கு அரசுதான் ஒரு சரியான தீர்வு சொல்ல முடியும்.இதன் பாதிப்பு அருகி இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

பாரதி said...

kannaki வருகைக்கு நன்றி

சாயப்பட்டறை பிரச்னை: நீதிமன்றத் தீர்ப்பின்படி உதவத் தயார் - கருணாநிதி

//http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=178525&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=//