Thursday, December 10, 2009

டாடா ஆலைக்கு 900 ஹெக்டேர் நிலம்: வியட்நாம் அரசு ஒப்புதல்

டாடா ஆலை இரும்புத் தொழிற்சாலை அமைக்க வியட்நாம் அரசு 900 ஹெக்டேர் நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் கூட்டு நிறுவனமாக ஆலை தொடங்க டாடா நிறுவனம் முன் வந்துள்ளதாகவும், அங்குள்ள ஹடின்ஸ் மாகாணத்தில் 725 ஹெக்டேர் நிலம் ஆலைக்காக ஒதுக்கப்படும் எனவும், 150 ஹெக்டேர் நிலம் குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும், இது தவிர துணை நிலையங்களுக்கு 37 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை, ஆண்டுக்கு 4.5 கோடி டன் இரும்பு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கூட்டு நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் டாடா நிறுவனம் வசம் இருக்கும். ஏற்கெனவே ஆலைக்கென டாடா நிறுவனம் கண்டறிந்த இடத்தை தைவான் நிறுவனத்துக்கு ஒதுக்கியதால் புதிய இடத்தை முடிவு செய்து அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

வியட்நாம் ஸ்டீல் கார்ப்பரேஷன், வியட்நாம் சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆலையில் 35 சதவீதம் முதலீடு செய்ய உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள இரும்பு கனிம சுரங்கத்தில் 30 சதவீத பங்கு டாடா நிறுவனம் வசம் இருக்கும். இந்த பகுதியில் குளிர் உருட்டாலை அமைக்கவும் டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது புதிய ஆலையை 2010ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நிலம் ஒதுக்குவதற்கு கால தாமதம் ஆனதால் இத்திட்டப் பணி 2012ல் முடிவடைந்து உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்

No comments: