Saturday, June 20, 2009

சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் : ஏர் - இந்தியாவும் கேட்கிறது

ஜூலை மாதத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் என்று அதன் ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் கேட்டுக்கொண்டது போலவே, ஏர் - இந்தியாவும் கேட்டிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ், அதன் எல்லா ஊழியர்களிடமும் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க சொன்னது. ஏர் - இந்தியாவோ, நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களிடமும் மூத்த அதிகாரிகளிடமும் மட்டுமே ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை பெறாமல் வேலைபார்க்க சொல்லி கேட்டிருக்கிறது.கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த இரு விமான கம்பெனிகளும் செலவை கட்டுப்படுத்த இந்த ஏற்பாட்டிற்கு இறங்கி வந்திருக்கின்றன. இது குறித்து வெள்ளி அன்று ஏர் - இந்தியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஏர் - இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர் அர்விந்த் ஜாதவ், ஜெனரல் மேனேஜர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஜூலை மாதத்தில் சம்பளம், ஊக்கதொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த மாத துவக்கத்தில்தான் ஏர் - இந்தியா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை ஜூலை ஒன்றாம் தேதிக்கு பதிலாக 15 நாள் கழித்து ஜூலை 15 ம் தேதி வழங்குவதாக அறிவித்தது. இப்போது அதன் மூத்த அதிகாரிகளுக்கு ஜூலை மாதம் சம்பளம் இல்லை என்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் ஏர் - இந்தியா ரூ.4,000 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.2,226 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்


1 comment:

Unknown said...

//2008 - 09 நிதி ஆண்டில் ஏர் - இந்தியா ரூ.4,000 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.2,226 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.//

இப்படியே போனா எங்க போயி முடியும்?

ஏர் இந்தியாவின் நிர்வாகமும் சேவையுமே இந்த நஷ்டத்துக்கு கரண்முன்னு தோனுது.